மனதை ஒருமுகப்படுத்த என்ன விஷயங்கள் செய்யலாம்?
ஒரு நாள் சீடர் ஒருவர் குருநாதரிடம் வந்தார். அவரிடம் 'சுவாமி, உயர்ந்த நிலைகளில் சஞ்சரிக்கும் மனம் சில சமயங்ளில் கீழே இறங்கி விடுகிறது. சலிப்பும் சோர்வுமே மிஞ்சுகிறது. மனம் வெறுமை அடைந்து வறட்சி நிலவுகிறது. அத்தகைய சமயங்களில் நான் என்ன செய்ய வேண்டும்?' என வருத்தத்தோடு கேட்டார்.
அதைக் கேட்ட குரு அமைதியாக 'நீ கடலைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? கடல் அலைகள் எப்பொழுதும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? அவை ஒரு சமயம் உயர் கிளம்புகின்றன. பிறகு தாழ்கின்றன. தாழ்ந்து விட்டோமே என கலங்கி அப்படியே விழுந்து கிடப்பதில்லை. முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் உயர்கின்றன. நம்முடைய மனமும் அத்தகையதாகவே இருக்க வேண்டும். கடலின் பலமே அந்த அலைகள் தாம். அதைப்போல் மனதில் பாயும் எண்ணமும் அலைகளே. வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும். அச்சமயங்களில் சோர்வடையாமல் சாதனைகளைத் தொடர்ந்து செய்வாயாக' என அறிவுரை கூறினார்
இது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் ஓயாமல் எண்ன அலைகள் அடித்துக்கொண்டே இருந்தால், நான் மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது!!
இதோ நம் மனதை ஆளும் கலையை கற்றுக்கொடுக்கும் குரு ஓஷோ "ஒளிந்திருப்பது ஒன்றல்ல" புத்தகத்தில் சொல்வதை கேளுங்கள்
"லட்சக்கணக்கான அலைகளோடு இருக்கும் கடலை கவனிப்பதைப் போல இருக்கும். இதுவும் கூட ஒரு கடல்தான்,
எண்ணங்கள் தான் அலைகள். ஆனால் மக்கள் போய் கடலில் இருக்கும்அலைகளை ரசிக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வில் ஏற்படும் அலைகளை ரசிப்பதில்லை.
மனதை மாற்றுங்கள்.
மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்ற வேண்டுமென்று கருதினால், சுவாசம்தான் சிறந்தவழி. மனதின் எல்லா பழக்கங்களுமே சுவாசத்தின்பாணியை பொறுத்தே இருக்கிறது.
சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், உடனே மனது மாறுகிறது, சட்டென்று மாறுகிறது. முயன்று பாருங்கள்!
எப்போதேல்லாம் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வருகிறதோ, நீங்கள் பழைய பழக்கத்திற்கே போகிறீர்கள், உடனே மூச்சை வெளியே விடுங்கள் - ஏதோ அந்த முடிவை அந்த வெளியேவிடும் மூச்சுவழியாக தூக்கி எறிவது மாதிரி. வயிற்றை உள்ளே இழுத்து வெளியே மூச்சைவிடுங்கள், நீங்கள் அந்த காற்றை வெளியே எறியும் போது, அந்த முடிவை தூக்கி எறிவதைப் போல உணருங்கள், அல்லது நினையுங்கள்,
பிறகு புதிய காற்றை ஒன்றிரண்டுமுறை ஆழமாக உள்ளே இழுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள். முழுமையான புத்துணர்ச்சியை உணர்வீர்கள். பழைய பழக்கங்கள் வந்து ஆக்ரமிக்க முடியாது.
அதனால் மூச்சை வெளியே விடுவதிலிருந்து துவங்குங்கள், உள்ளே இழுத்தல்ல. எதையாவது உள்ளே எடுக்க வேண்டுமென்றால், மூச்சை உள்ளே இழுக்கத் துவங்குங்கள். எதையாவது வெளியே தூக்கி எறிய நினைத்தால், மூச்சை வெளியே விடத்துவங்குங்கள். மனம் உடனே எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பாருங்கள். உடனே உங்கள் மனது வேறு எங்கோ நகர்ந்துவிட்டதை காண்பீர்கள்;
ஒரு புதிய காற்று உள்ளே வந்திருக்கிறது. நீங்கள் அந்த பழையபள்ளத்தில் இல்லை, அதனால் அந்த பழைய பழக்கத்தை மறுபடியும் கொண்டு வரமாட்டீர்கள்".
அடுத்து, ஓம்' என்று ஜெபியுங்கள்.
உங்களைச் சுற்றி ஏராளமான தொந்தரவுகள் இருப்பதாக எப்போதெல்லாம் நீங்கள் உணர்கிரீர்களோ அல்லது எப்போது தங்கள் புதிய காற்றை உள்ளே இழுங்கள், உடனே அந்த உந்துதல் போய்விட்டதை காண்பீர்கள். உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும்.
காலையில் ஒரு இருபது நிமிடங்கள், மாலையில் ஒரு இருபது நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து, ஒரு சௌகரியமான முறையில் அமர்ந்து, உங்கள் கண்கள் பாதி திறந்து கீழ்நோக்கி பார்த்தபடி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சுவாசம் மெதுவாக இருக்க வேண்டும். உடம்பு அசையக் கூடாது. உள்ளே`ஓம்' என்று ஜெபித்துக் கொண்டேயிருங்கள்; அது வெளியே கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் உதடுகள் மூடியிருந்தால், அது உள்ளே அதிகமாக ஊடுருவும்; நாக்குகூட அசையக்கூடாது. அதையே வேகமாக திருப்பிதிருப்பி சொல்லுங்கள்"
ஓம்ஓம்ஓம்” - வேகமாக, சத்தமாக ஆனால் உங்களுக்குள்ளேயே. அது உங்கள் காலிலிருந்து தலைவரை, தலையிலிருந்து கால்வரை அதிர்வுகளை ஏற்படுத்துவதாக உணருங்கள். ஒவ்வொரு `ஓம்' என்பதும் ஒரு குட்டையில் கல்லைபோடுவது மாதிரி உங்கள் உள்ளுணர்வுக்குள் விழும். அலைகள் எழுந்து அடிவரை பரவும். அந்த அலைகள் விரிந்து உங்கள் முழு உடலையும் தொடும்.
அப்படி செய்யும்போது, ஒரு தருணம் வரும் - அந்த தருணம்தான் மிக அழகான தருணமாக இருக்கும். - அப்போது நீங்கள் எதையுமே திருப்பிசொல்ல மாட்டீர்கள், எல்லாமே நின்று போயிருக்கும். திடீரென்று நீங்கள் எதையும் ஜெபிக்கவில்லை என்பது தெரியும், எல்லாமே நின்று போயிருக்கும். அதை ரசியுங்கள். ஏதாவது யோசனைவந்தால், மறுபடியும் ஜெபிக்கத் துவங்குங்கள்.
நீங்கள் இரவில் செய்வதாக இருந்தால், தூங்கப் போவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செய்யுங்கள். படுக்கப்போகு முன்செய்தால், உங்களால் தூங்கமுடியாது காரணம் அது உங்களை புத்துணர்வோடு வைத்திருக்கும், உங்களுக்கு தூங்க வேண்டுமென்கிற உணர்வே வராது.
அப்படி செய்ய செய்ய மனது ஒருமுகப்பட்டுவிடும் என்கிறார்.
இதோ அவர் வார்த்தைகளிலேயே கேளுங்களேன்
"மனதிற்கு ஓய்வு கொடுங்கள். - அதற்கு அது தேவை! அது எளிதானது.
அதற்கு ஒரு சாட்சியாக இருங்கள், அது உங்களுக்கு இரண்டையும் தரும். மெதுவாக, மெதுவாக, மனம் மௌனமாக இருக்க கற்கிறது. மௌனமாக இருப்பதன் மூலமாக அது மிகுந்த சக்தியோடு இருக்கிறது என்பது தெரிந்துவிட்டால், பிறகு அதன் வார்த்தைகள் எல்லாமே வெறும் வார்த்தைகள் அல்ல; ஏற்கத்தக்கதாக, செழிப்போடு, தரத்தோடு, முன்பு இல்லாததைப்போல - அவை நேரடியாக, ஒரு அம்பைப்போல போகும். தர்க்கரீதியான தடைகளைதாண்டி, நேரடியாக இருதயத்தை எட்டும். பிறகு அந்த மனம் என்பது மௌனத்தின் கையில் மிகுந்த பலம்கொண்ட ஒரு நல்ல வேலைக்காரனாக இருக்கும். பிறகு இருத்தல்தான் எஜமானர், பிறகு அந்த எஜமானர் மனத்தை தேவைப்படும்போது பயன்படுத்தி, தேவையற்றபோது அணைத்துவிடலாம்."
என்றாவது நம் ஆழ்மனதின் குரலை கேட்டுள்ளோமா?
"மௌனமாக உட்காருங்கள். உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம், தினமும் ஒருமணிநேரம், எதுவும் செய்யாதீர்கள் உட்காருங்கள் கேளுங்கள். சுற்றிலுமுள்ள சத்தங்கள் எல்லாவற்றையும் கேளுங்கள், எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல், அதற்கு என்ன அர்த்தம் என்று விளக்கம் சொல்லாமல், எந்த காரணமுமில்லாமல் கேளுங்கள். அங்கே ஒரு சத்தம் இருக்கிறது. அதனால் அது ஒருவரால் கேட்கப் படுகிறது.
மெதுவாக, மெதுவாக, மனது மௌனமாக இருக்கத் துவங்குகிறது. சத்தம் கேட்கப்படுகிறது ஆனால் மனம் அதற்கு இனிமேலும் விளக்கம் கொடுப்பதில்லை - இனிமேலும் அதை பாராட்டவில்லை, இனிமேலும் அதைபற்றி யோசிப்பதில்லை. திடீரென்று அந்த இருப்பு மாறுகிறது.
மனம் மௌனமாக இருக்கும்போது, வெளிசத்தத்தை கேட்கும்போது, திடீரென்று ஒரு புதியசத்தம் கேட்கிறது ஆனால் அது வெளியே இருந்து இல்லாமல், உள்ளேயிருந்து கேட்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டால், பிறகு கயிறு உங்கள் கையில்தான். அந்த சங்கிலியையே பின்பற்றுங்கள், அதில் ஆழமாக இன்னும் ஆழமாக செல்லுங்கள். உங்களுடைய இருத்தலில் மிக ஆழமான பகுதி ஒன்றுள்ளது, அதில் போக தெரிந்தவர்கள் முற்றிலும் ஒரு வித்தியாசமான உலகத்தில், ஒரு தனியான யதார்த்ததில் வாழ்பவர்கள்,.
"ஒருவர் அந்த உள்சத்தத்தை மறுபடியும் மறுபடியும் கேட்டால் அவர் தெய்வீகத்தோடு உள்ள தொடர்பிலிருந்து விலகமாட்டார். அவர் இந்த உலகில் வாழலாம், ஆனாலும் அந்த தெய்வீகத் தன்மையோடு தொடர்பிலேயே இருக்கலாம். இப்படியே நாளடைவில் இந்த தந்திரத்தை தெரிந்து கொண்டால், சந்தையில் இருந்தால் கூட உங்களால் அதை கேட்கமுடியும். ஒருமுறை அதை தெரிந்து கொண்டு விட்டால் பின் அதை கேட்பதில் சிரமம் எதுவும் இருக்காது.
முதல்முறை கேட்பதில் தான் பிரச்னை, காரணம் எது எங்கிருக்கிறது, அல்லது அது என்ன அதை எப்படி அனுமதிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதற்கு தேவையானதெல்லாம் மேலும் மேலும் மௌனமாக இருப்பதுதான்."
இதென்ன உள்மனதோடு தொடர்பு கொண்டால் தெய்வீகத்தன்மையா?
ஆமாம்.அப்படித்தான் …
ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் பிரசித்தமான 'எகச்லோகி' என்னும் ஸ்லோகத்தில் "நானே ஜோதி" என்று கூறியுள்ளார்.
அது எப்படி?
குரு பாதயாத்திரையாக வரும்போது ஒரு சீடன் குருவை வணங்கி,தன் கஷ்டங்களுக்கு தீர்வு அளிக்குமாறு வேண்டுகிறான். அப்போது குருவானவர் இவ்வாறு கேட்கிறார்.
குரு: ஓ சிஷ்யனே, உனக்கு எது ஒளி அளிக்கிறது!
சிஷ்யன்: பகலில் சூரிய வெளிச்சம், இரவில் சந்திரன் மற்றும் தீபங்கள்
குரு: சூரியன், சந்திரன், தீபங்களை எவ்வாறு காண்கிறாய்?
சிஷ்யன் : கண்களினால் காண்கிறேன்.
குரு: கண்களை மூடிக் கொண்டு இருக்கும்போது எது ஜோதி?
சிஷ்யன்: புத்தி
குரு: அந்த புத்தியையும் பிரகாசிக்கச் செய்யும் ஜோதி எது?
சிஷ்யன்: அது நானேதான்
குரு: அப்படியென்றால் நீயே அந்த பரஞ்சோதியாக இருக்கிறாய் அல்லவா?
சிஷ்யன்: ஆம், நானே பரஞ்ஜோதி,
இந்த உண்மையை அறிந்த பின் சிஷ்யனின் சந்தேகங்கள் தீர்ந்து விடுகின்றன.
நமக்கும் தான்….
நாமே பிரம்மம் என்னும்போது, நம்மால் முடியாதது என்று ஒன்று இருக்கிறதா என்ன